Friday 27 September 2013

குஜராத்தின் உண்மை நிலை இதுதான்- ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !

2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி இந்து)
சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன.
பீகார் முதல்வர் நித்திஷ்குமார் தனது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதற்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பின. கடந்த மே மாதத்தில் பின் தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கான அளவீட்டு முறையை பரிந்துரை செய்ய மத்திய அரசு ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது.
இது வரை இருந்து வந்த கட்கில்-முகர்ஜி ஃபார்முலாவில் மக்கள் தொகையை முதன்மையாகவும், தனிநபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றை அடுத்தபடியாகவும் வைத்து மாநிலங்களின் முன்னேற்றம் அளவிடப்பட்டது. இந்த முறைக்கு மாற்றாக பின்வரும் 10 காரணிகளை சம முக்கியத்துவமுடையதாக கொண்டு மாநிலங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனிநபர் மாத நுகர்வு
கல்வி
மருத்துவம், சுகாதாரம்
வீட்டு உபயோக பொருட்கள்
வறுமை வீதம்
பெண்களின் கல்வியறிவு
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
நகர மயமாக்கல் வீதம்
நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
சாலை இணைப்புகள்

இவற்றைக் கொண்டு மாநிலங்கள் 0 முதல் 1 வரை இலக்கமிட்டு வரிசைப்படுத்தப்பட்டன. 0.6-க்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட 10 மாநிலங்கள் மிகப் பின் தங்கிய மாநிலங்கள் என்றும் 0.4-க்கும் 0.6-க்கும் இடையில் மதிப்பீடு செய்யப்பட்ட 11 மாநிலங்கள் பின்தங்கியவை என்றும் 0.4-க்கு குறைவாக மதிப்பீடு பெற்ற 7 மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்கள் என்றும் கருதப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தியிருக்கிறது.
மாநிலங்கள் பட்டியல்
படம் : நன்றி தி இந்து.
இதன்படி பின் தங்கியிருப்பதற்கான குறியீட்டில் குறைவான புள்ளிகள் பெற்று கோவா (0.045) மிக அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், கேரளா (0.095) இரண்டாம் இட்த்திலும், தமிழ்நாடு (0.341) மூன்றாம் இடத்திலும், மிகவும் பின் தங்கிய மாநிலமாக ஓடிசா (0.798) கடைசி இடத்திலும் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் பின் தங்கியிருப்பதில் 0.491 மதிப்பீடு பெற்று மாநிலங்களின் வரிசையில் 12-வது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சி குறைந்த மாநிலம் என்ற பிரிவில் வருகிறது. இந்த பிரிவில் வரும் மற்ற மாநிலங்கள் மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசம்.
இது போன்ற புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி 12 ஆவது இடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.
வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதிலோ இல்லை மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதிலோ உள்ள இத்தகைய முதலாளித்துவ பொருளாதார ஆய்வுமுறைகளை நாங்கள் ஏற்பதில்லை. வினவிலும் அவற்றை விளக்கி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் இந்துமதவெறியர்களும், பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட மோடி ரசிகர்களும் இத்தகைய ஆய்வு முறைகளைக் கொண்டுதான் குஜராத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அந்த பிரச்சாரங்களுக்குரிய ஒரிஜினல் ஆவணங்களைப் பார்த்தாலே குஜராத் பின்தங்கியிருப்பது தெரியவரும். அந்த வரிசையில் இது மற்றுமொரு சாட்சி.
இதனால்தான் திருச்சி பொதுக்கூட்டத்திலும் குஜராத்தின் சாதனை என்று ஒரு வரியைக்கூட மோடி குறிப்பிடவில்லை. மோடி பொய் சொல்வதில் அஞ்சுபவர் இல்லை என்றாலும் அவரது பொய்கள் தோலுரிக்கப்பட்ட நிலையில் அந்த டாபிக்கே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு, பயங்கரவாதம் பக்கம் தாவி விட்டார். ஏனெனில் ஒரு பயங்கரவாதிதானே பயங்கரவாதத்தை குறித்து ஆழமாக பேச முடியும்!
மேலும் படிக்க

Saturday 21 September 2013

சிவாஜி: வீரசிவாஜியா? பார்ப்பன அடிமையா?

சிவாஜியை வீரசிவாஜி என பாடப்புத்தகத்திலும், இந்துத்துவவாதிகளும் ஒரு நூற்றாண்டுக்காலமாக நம்மீது போலியான கட்டமைப்பை திணித்து நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன? சிவாஜி பிராமண இருண்டகால,வேதகால ஆட்சியை நிறுவ முயன்று தோற்றுப் போன ஒரு பிராமண அடிமை சிவாஜி.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க அணியினர்  சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ மராட்டிய மாதிரி ஆட்சியை தங்கள் கனவாக கொண்டிருக்கும் அதே பாணியில் ஆட்சி அமைக்க துடிக்கும் அந்த முன்மாதிரி ஆட்சியின் அவலங்களையும் சிவாஜியின் உண்மை தோற்றத்தையும் விரிவாக பார்ப்போம் இந்த பதிவின் ஊடாக.

சாதி என்பது தொட்டுத் தொட்டு பற்றித் படரும் ஆற்றல் மிக்கது. அது தேச ஒற்றுமைக்கு பரம விரோதமானதாகும். சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ வைதீகப் பழமையில் கட்டியெழுப்பப்பட்டதால் அதனினுடைய மரண அணுக்களும் அதற்குள்ளயே இருந்திருக்கிறது. சாதி வேற்றுமைகளையும் விரோதங்களையும் உயிரெனப் பாதுகாத்த இந்து கலகம் தோய்ந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை இந்தியா முழுக்க நிலைநாட்டத்தான் சிவாஜி விரும்பினார். அது மணலைக் கயிறாகத் திரிப்பதற்கொப்பான நடைபெறாத விஷயமாகும். இந்தியாவை போன்ற ஒரு பெரும் கண்டத்தை முழுக்க சாதி வேற்றுமைகளாலும் மனிதநேய உணர்வின்மையும் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய மனித சக்தியாலும் முடியாது. இவ்வாறு சீரழிந்து செல்லரித்துப்போன ஒரு சமுதாய அமைப்பை உள்ளடக்கிய பிராமணக் கொடுங்கோன்மைக்கு இந்தியாவை அடிமை கொள்ளத் தான் பதினெட்டாவது நூற்றாண்டில் சிவாஜி என்கிற பிராமண அடிமையைக் கொண்டு முயற்சித்தனர்.

புரோகிதக் கொடுங்கோன்மையின் அநியாயங்களைச் சகிக்க முடியாமல் மக்கள் மூச்சுத்திணறித் துடித்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தேசிய அபிலாஷைகளும் கோட்பாடுகளும் மிதித்து நசுக்கப்பட்டன. சாதியின் அடிமைத்தனமும் அவமானமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. பேஷ்வாக்களும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செல்வம் குவிக்க மக்களுடைய சொத்துக்களைப் பிழிந்தெடுத்தனர். சுதந்திர மனிதனின் அவனுடைய பாதுகாப்பின் கடைசி தொங்கு நூலும் அறுக்கப்பட்டது. உண்மையில் பிரிட்டீஷ்காரர்கள் பிராமண அடிமை சிவாஜியின் மராட்டிய தேசத்தை கைப்பற்றியது அவர்களுக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. “மராட்டிய மக்கள் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சோம்பலாக இருந்துவிட்டதால் மராட்டியத்தை கைப்பற்றுவது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.

சிவாஜி சிறு வயதிலிருந்தே பிராமணர்களிடம்தான் வளர்ந்தார். தந்தை தன்னுடைய மேலாளரான பிராமணனிடம் சிவாஜியை ஒப்படைத்து எங்கோ போய்விட்டார். வைதிக மதத்திலும் விக்கிரக பூஜையிலும் ஆழந்த பக்தி நம்பிக்கைகொண்ட ஒரு சிறுவனாக சிவாஜி வளர்ந்தார். சிவாஜியிடம் அடிக்கடி பாவனிதேவியின் அருள் வெளிப்பட்டதாகவும் , சிவாஜிக்கு இடுக்கண்நேரும் போதெல்லாம் தேவியின் அறிவுரை கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் பல பேர் நம்பினர். இது சிவாஜியின் தலைமையைப் பலப்படுத்த புரோகிதர்கள் பரப்பிய கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

ஒரு நாட்டின் நிறுவனர் என்ற அருகதை பெற்ற சிவாஜி தன்னுடைய இளம்பருவத்துப் பிராமணத்தைக் கைவிட முடியாதவராக இருந்தார். எனவே தன்னையும் தன்னுடைய நாட்டையும் புரோகிதக் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துவிட்டார். நாட்டை பிராமணர்களுக்கோ கோவில்களுக்கோ காணிக்கையாக்குவது, அல்லது தானமாகக் கொடுப்பது, சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு சத்திரிய பதிவியை ஏற்பது, திவான்களும் ஆலோசகர்களுமாக இருப்பதற்கு பிராமணர்களுக்கு உரிமையிருக்கிறதென்று அங்கீகரிப்பது போன்றவை வாலி, வாமனன் காலத்திலிருந்து நவீன திருவிதாங்கூர் வரலாறுவரை பிராமண நுகத்தடியை சுமக்கும் சடங்குகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப்படும் பிராமணராவர். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டைக் கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு ‘ பிரம்மஸ்வம்’ அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக் கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில்-மிலிடெரி ஆட்சியின் மிகமுக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் - மிலிடெரி ஆட்சியின் ஆகப்பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரியுமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்காளயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றிகிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப் போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதைகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

அமைச்சரவையில் மதவிஷயங்களுக்கான அமைச்சராக பண்டிட்ராவ் என்ற ஒரு பிராமணர் இருந்தார். சாதிச் சட்டங்களையும் ஆச்சாரங்களையும் நடைமுறைப்படுத்துவது, சிவில் - கிரிமினல் சட்டங்களை அமுலாக்குவது, அரண்மனையைச் சார்ந்த தர்மஸ்தாபனங்களை நிர்வகிப்பது போன்றவை பண்டிட் ராவின் பொறுப்பிலிருந்தன.

பிராமணர்கள் அனைவருக்கும் அவரவர்களின் புலமைக்கேற்ப ஆண்டுதோறும் காணிக்கையும் நன் கொடைகளும் அளிக்கப்பட்டன. வாழக்கைப்பாட்டிற்காக எந்தப் பிராமணனும் நாட்டைவிட்டு வெளியே செல்ல நேரவில்லை. இந்தத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையான நிதிவைப்பிலிருந்து கிடைக்கும் ஆண்டுவருவாய் மட்டும், ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது ஐந்து லட்சம் ரூபாய் இருந்ததாம்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்க்கத் தன்னுடைய ‘பட்டாபிஷேகத்தை’ (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கெளரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஏழுகோடி அக்காலத்திலேயே செலவழிக்கப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்றுசிரியர்கள்.

சாத்திர முறைப்படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்சபரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார் இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க சிவாஜியைப் புரோகிதர்கள் அனுமதிக்கவில்லையென்பது மட்டுமின்றி, சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர்.

சிவாஜியின் அனைத்துப் போர்களிலும் பிரபுக்கள் மகத்தான சேவையாற்றினர். பிரபுக்களுக்குப் பாரம்பரியத்திற்கேற்ப இருந்த சாதிப் பதவியில் எத்தகைய இறக்கங்களையும் செய்யக் கூடாது என்று மன்னரின் கட்டளை இருந்தபோதிலும் பிராமணர்கள் பிரபுக்களை சாதியில் தரம் குறைப்பதற்காக புராணங்களில் இடைச் செருகலாக புதிய வாக்கியங்களை எழுதிச் சேர்த்தனர். பேஷ்வாக்களின் ஆட்சி துவங்கிய பிறகு பிரபுக்களுக்கு புதிய உத்தியோகங்கள் எதுவும் அளிக்கப்படாமல் அவர்களுடைய உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. மன்னர்களும் பேஷ்வாக்களும் சாஸ்திரங்களின் அனைத்து அநீதிகளையும் அதர்மங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்கினர். பேஷ்வா பூனாவில் ஒரு மதநீதிமன்றத்தை நிறுவி பிராமணர்களை நீதிபதிகளாக்கினார்.

“ இந்துச் சட்ட நியுணரான ஒரு சாஸ்திரி அதன் தலைமை நீதிபதியாக இருந்தார் மத அடிப்படையிலான,சாதி அடிப்படையிலான, எல்லா வழக்குகளையும் அந்த நீதிமன்றம் விசாரனை செய்து தீர்ப்பளித்தது. உடன்கட்டை ஏறுதலும் (சதி) பால்ய விவாகங்களும் முன்னை விட கூடுதலாக ஊக்குவிக்கப்பட்டன. இறந்துபோனவர்களின் மனைவி மட்டுமின்றி அவருடைய வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டனர்.

சிவாஜி காலமான பிறகு பேஷ்வாவும் பிராமண நண்பர்களும் சேர்ந்து மூத்த புதல்வரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது புதல்வருக்கு மகுடம் சூட்டினர். மன்னர் பேஷ்வாவின் கட்டுப்பாட்டில் சொந்த அரண்மனையிலேயே ஒரு கைதியைப் போல் ஆகிவிட்டார். பேஷ்வாக்கள் ஆட்சி அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக்கி கையப்படுத்தினர். இத்தகைய வஞ்சகச் செயல்கள் காரணமாக மக்களுக்குள் உறங்கிக் கிடந்த கோபமும் கலகமும் வெடித்துக் கிளம்பின. ரஜபுத்திரத் தலைவர்கள் அவரவர்களின் மாவட்டங்களில் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். அமைச்சரவை ஒழிந்துவிட்டது. சிவாஜி இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் அவருடைய பேரரசும் நொறுங்கிச் சிதைந்துவிட்டது.

சிவாஜியின் காலத்திலும் பேஷ்வாக்களின் காலத்திலும் மக்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கினைக்கவும் கல்வியில் முன்னேற்றவும் புத்திசாலித்தனமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிராமண அதிகாரிகளின் பணப் பேராசையில் இருந்து  யாரும் தப்ப முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தை ஈவிரக்கமின்றிப் பிழிந்தெடுத்தனர். கடைசி பேஷ்வா பிராமணரின் வீழ்ச்சியின் போது அவர் ஐந்து கோடிரூபாய் சம்பாதித்திருந்தார்.

References
Chapter XIII
Ranade's Rise of Maratha Power - 36,10,50,51
J.Sarkar's Sivaji and his times page : 431,430,435, 432,17,8,429,430, 431
C.A.kincaid and parasnis History of Maratha people Vol. 3 page 243,175,233.

Monday 26 August 2013

“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகு.

இந்துத்துவ ஊடக போய்ப் பிரச்சாரம்
வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், “அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்”எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், “அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்டதாக’’ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.  குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.
ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது.  இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், “அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட” உண்மையைப் போட்டு உடைத்தனர்.  மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்து விடவில்லை.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் “இந்து’மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது.  இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.
இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, “வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்” கூறி வருகிறது.  எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன.  இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் “பாலியல் ஓநாய்கள்’என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க “ராணாராகினி’என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
R.S.S ன் அசிங்க பிரச்சாரம்
இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான “பைக்’’குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு “காதல் புனிதப் போர்’(ஃணிதிஞு  ஒடிடச்ஞீ) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன.  முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.
ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம்.  இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்-அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.
கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,”தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக’பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர்நீதி மன்றம், “லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?”என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் “லவ் ஜிகாத்’பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.
தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், “தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்”எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,”தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக” வாக்குமூலம் அளித்தார்.  எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜாராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது.  சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.
போலீசார் தமது அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை “லவ் ஜிகாத்’என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது.
உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றில், “வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை” ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை.  வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில்  மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?  இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

Thursday 2 May 2013

ஆபாச படங்கள் அசிங்கமான ஆபத்து

க‌மலேஷ் வஸ்வானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் போர்னோகிராபியை (பாலியல் காட்சிகள்) இணையத்தில் பார்ப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும், மீறி பார்ப்பவர்களை பிணையில் வர இயலாத பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இணையத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பாலியல் உறவுகளுக்காக நிற்பதாக சொல்லிக் கொள்ளும் இணையதளப் போராளிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கமலேஷின் கோரிக்கை, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு போர்னோ ஒரு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகிறது. போர்னோ என்பது கருத்து சுதந்திரமா இல்லை கருத்துருவாக்கமா என்ற கேள்வியை பலரும் பரிசீலிப்பதில்லை. தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ அறிவுஜீவிகள் விதந்தோதும் கட்டற்ற சுதந்திரத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க வேண்டியதாகிறது.

இப்படி சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர். இரண்டாவது 2012 இல் உலகிலேயே கூகுள் தேடுபொறியில் அதிகமுறை போர்ன் என்ற வார்த்தையை தேடியது டெல்லியில்தானாம். அதற்கு இணையாக தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வல்லுறவுக் குற்றம் கடந்த ஆண்டுதான் அதிகமாம். இது பிற ஆண்டுகளைக் காட்டிலும் சற்றேறக்குறைய இருமடங்கு அதிகம்.


இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொது இடங்களில் இது போன்ற இணைய தளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கூடுகின்ற இடங்களில் ஆபாசப் படங்களை வைக்க தடை உள்ளது. காரணம் கூகுள் இணைய தளத்தில் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் அல்லது சிறுமி போர்ன் என்ற வார்த்தையை போட்டுத் தேடினால் கிடைப்பது பெரும்பாலும் காடு அல்லது வயல்வெளியில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகும் பெண்ணின் கதைதான். பாலியல் உறவு என்பதே அந்த பதின்ம வயது இளைஞர்களிடம் வன்முறை கலந்த இன்பமாகத்தான் பதிவாகிறது. சில காலம் கழித்து இதுவெல்லாம் சாதாரணம் என்ற அளவுக்கு புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள். ஊடகங்களும், சினிமாவும் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களை ஒரு ஸ்டீரியோ டைப் இல் பார்க்க சொல்லித் தருவதால் இளைஞர்களுக்கு பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக மாறுவது பெரிய விசயமாகப் படுவதேயில்லை.
போர்னோகிராபி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு இணங்க நிஜ உலகில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வயதும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே ஃபோர்னோ தளங்களை சரோஜாதேவி புத்தகத்தின் ஈ-பதிப்பு என்று குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அமெரிக்க நீதித்துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து செய்யும் குழுவான பாலியல் வல்லுறவுக் குற்றம் 1994-98 இல் 7 சதவீதமாக இருந்து, 2005-10 இல் 10% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இப்படி வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சியை பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது இளைஞர்களின் ஆண்மைக்கு அடையாளமாக மாறி உள்ளது. பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பது, பாலியல் உறவுக்கான கருவி என ஸ்டீரியோடைப்பாக பார்க்கப் பழகிய இவர்களை அடுத்த கட்டமாக அந்த அரைத்த மாவில் கல் தோசை, மசாலா தோசை, பொடி தோசை என சுட வைக்கும் வேலையை சோசியல் மீடியா செய்யத் தூண்டுகிறது. ஏற்கெனவே உள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பும், வளர்ந்து வரும் நுகர்வு மோகமும் ஒரே பெண்ணிடம் விதவிதமான உறவு என வெரைட்டி காண்பிக்கிறது. தன்னைப் போன்ற ஒரு சக பயணி என்ற உணர்வு இந்த அமெரிக்க பாணி இளைஞனிடம் சுட்டுப்போட்டாலும் வராது.
க‌டந்த ஆண்டு அமெரிக்க நாட்டின் ஓகியோவிலுள்ள ஸ்டூபன்வில் உயர்தரப் பள்ளியில் நடந்த குழுவான பாலியல் வன்முறையில் பல மாணவர்கள் இணைந்து ஒரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து போட்டனர். இக்குற்றத்தில் சாட்சியாக இருந்த மாணவர்கள் இதனை ஒரு வல்லுறவு என்று நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்தா பார்த்தன்ஸ் என்ற அமெரிக்க மாண
வியும், ஆட்ரே போட்ஸ் என்ற கனடா மாணவியும் இதே போன்ற நிகழ்வால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போர்னோ தளங்களில் உண்மையான பாலியல் காட்சி என்று போட்டால்தான் மவுசு அதிகம். அது அமெரிக்காவில் தோழிகளை படம் பிடிப்பதாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகளில் தன்னிடம் வேலை பார்க்கும் பதின்ம வயதுப் பெண்களை மிரட்டி படம் பிடிப்பதாக உள்ளது. இந்த இடத்தில்தான் சமூக தளமும், போர்னோ தளமும் பிரியும் கோடு அழியத் துவங்குகிறது. போர்னோ தளத்தில் பார்த்த போது தெரிந்த கற்பனையான பக்கத்து வீட்டு ஆண்டி இப்போது சக மாணவியாக, உடன் வேலை செய்பவராக மாறத் துவங்குகிறது. நேரடியாக போர்னோ தளத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியாவிட்டாலும், இத்தளங்களை பார்ப்பதன் அதீதம் காரணமாக நிறைய மணமுறிவு, விவாகரத்துகள் நடந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘மூன்றாண்டு வரை தண்டனை தருமளவுக்கு ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்ன வரைமுறைப்படுத்த உள்ளீர்கள்’ என்றெல்லாம் கேட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள் சிலவற்றுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஏப் 29 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘போர்னோ பார்ப்பதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்பது போன்ற சட்டங்கள் போடப்படலாம். சினிமாவுக்கு இருப்பது போல சென்சார் போடுவது சாத்தியமில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? எனத் தெரியவில்லை. ஆனால் போர்னோ தளங்கள் வெறும் கள்ளக் குழந்தை மட்டுமல்ல. மனித சமூகம் பண்பட எடுத்துக்கொண்ட பல நூற்றாண்டு காலத்தை பின்னோக்கி செலுத்த சில நிமிடங்கள் மட்டுமே அதற்கு தேவைப்படுகிறது. நிழலை நிஜமாக்க இளைஞர்கள் முந்துகிறார்கள். பாலியல் சுதந்திரம், எழுத சுதந்திரம் என கட்டற்ற சுதந்திரம் கடைசியில் பெண்களது உயிரோடும், சமத்துவமாகவும், சுய மானத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.
நன்றி மூலக்கட்டுரை :http://www.thehindu.com/opinion/op-ed/freedom-that-must-have-limits/article4663661.ece
நன்றி: வினவு 

Tuesday 9 April 2013

சம்பூகன் யார்??

இந்து தர்மப்படி (!?) இராமன் ஆட்சி செய்கிற காலத்தில் சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அப்பொழுது வேதம்தான் பாடம். அதை படிக்கவோ, காதில் கேட்கவோ சூத்திரருக்கு உரிமையில்லை. அதனால்தான் பார்ப்பான் அழுதுக் கொண்டே ராமனை நோக்கி வருகிறான். ராமனைப் பார்த்து ராமா உன் ஆட்சியில் அக்கிரமம் நடக்கிறது என்றும் அக்ரகாரத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதற்குக் காரணம் சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

ராமன் காட்டிற்கு சம்பூகனிடம் சென்று தனது வலது கைக்கு ஆணையிடுகிறான். அவன் தலையை வெட்டு என்கிறான். அவன் தலை வெட்டப்படுகிறது. அவன் உயிர் பிரிந்தது. உடனே அந்த பார்ப்பனக் குழந்தை உயிர்த்தெழுந்ததாம்.

இராமன் சம்பூகன் என்பவனை கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது அதற்கு காரணம் அவன் சூத்திரன். ( உத்திர காண்டம், அத்தியாயம் 76 )

ராமன் பார்ப்பன ஆதிக்கத்தின் அடையாளம் என்றால்
சம்பூகன் பார்ப்பன எதிர்ப்பின் அடையாளம்.